Our Feeds


Sunday, June 28, 2026

SHAHNI RAMEES

டெங்கு புகை விசுறும் செயல்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

 

டெங்கு  நுளம்புகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசிறல் செயல்முறையானது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை அல்லவென்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன, டெங்கு பரவலுக்கு மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளினால் புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், டெங்குவை ஒழிப்பதற்கான ஒரே தீர்வு அதுவல்ல என சுட்டிக்காட்டினார்.


நுளம்பு  ஒன்றின் வாழ்க்கை வட்டத்தில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு மற்றும் முதிர்ந்த நுளம்பு என நான்கு நிலைகள் காணப்படுகின்ற போதிலும், புகைத்தல் மூலம் முதிர்ந்த நுளம்புகள் மட்டுமே அழிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், ஒரு சுற்று புகை விசிறல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 20,000 ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவழிக்கப்படுவதுடன், இந்த பூச்சிக்கொல்லி நாசினிகள் காரணமாக நுளம்புகள் மட்டுமன்றி, சூழலுக்கு உகந்த மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் மற்றும் தட்டாரப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களும் இறப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக நஜித் சுமனசேன தெரிவித்தார்.

 

இதேவேளை, டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.


நேற்றைய தினம் வரை நாடு முழுவதும் 52,068 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »