ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது.
கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சி அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கும், அதனை மறுசீரமைப்பதற்கும் செயல்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து பல முக்கிய ஆலோசனைகளும் கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏனைய அரசியல் கட்சிகள், சக்திகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் எதிர்காலத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனித்தனியாகச் செயல்படுவதை விடுத்து, பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து எதிர்கால அரசியல் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்த விபரங்களைக் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி தலதா அத்துகோரள செயற்குழுவிடம் சமர்ப்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
