Our Feeds


Wednesday, June 3, 2026

SHAHNI RAMEES

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவுக்கு அரச பொதுமன்னிப்பு!



தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின்

மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு மன்னரின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இத்தகவலை தாய்லாந்து நீதி அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் ருத்தாபோல் நவரத் உறுதிப்படுத்தியுள்ளார் என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை (03) செய்தி வெளியிட்டுள்ளன.


பல வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த தக்ஷின் ஷினவத்ரா, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் தாய்லாந்திற்குத் திரும்பியதை அடுத்துக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.


ஆரம்பத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை, மன்னரின் விசேட பொதுமன்னிப்பு மூலம் ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டது.


இந்த ஓராண்டுத் தண்டனையில் 08 மாதங்களைச் சிறையில் கழித்த பின்னர், அவர் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிகப் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவரது நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காக அவரது காலில் 'மின்னணு கண்காணிப்பு வளையல்' ஒன்றைப் பொருத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


தற்போதைய 2026 ஆம் ஆண்டுக்கான அரச பொதுமன்னிப்பு ஆணையின் கீழ் தற்காலிகப் பிணையில் உள்ளவர்களில் தங்களின் தண்டனைக் காலம் முடிவடைய ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் உள்ளவர்கள், தகுதிநீக்கப் பிரிவுகளுக்குள் வராத பட்சத்தில் முழு விடுதலை பெறத் தகுதியுடையவர்களாகின்றார்கள்.


இந்த விசேட சட்ட விதியின் கீழ் தக்ஷின் ஷினவத்ராவுக்கு முழு அரச  பொதுமன்னிப்பு கிடைத்துள்ளதால், அவரது காலில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கண்காணிப்பு வளையல் உடனடியாக அகற்றப்படலாம் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நடப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதியே தக்ஷினின் உத்தியோகபூர்வ சிறைத்தண்டனைக் காலம் நிறைவடைகிறது. எனினும், அதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே இந்த அரச மன்னிப்பு கிடைத்துள்ளதால், அவர் மீதான அனைத்து சட்டக் கட்டுப்பாடுகளும் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »