ஹொரணை , படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளரைப் பிணையில் விடுவிப்பதற்கு ஹொரண நீதவான் நீதிமன்றம் இன்று (11) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படாத போதிலும், அவர் சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகிக் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
சட்டத்தரணிகளின் நீண்ட விவாதங்கள் மற்றும் கருத்துரைப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இருப்பினும், சந்தேகநபருக்கு நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடையனை விதித்துள்ளதுடன், இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
