Our Feeds


Saturday, June 13, 2026

SHAHNI RAMEES

#Update: அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

 

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் பயணித்த விமானப் படையின் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.


இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அசாமின் ஜோர்ஹட்டில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் வழக்கமான பயணத்தின்போது இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளும் ஆரம்பகட்ட விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.


ஆரம்பகட்ட முடிவுகள் வரும் வரை ஊகங்களை தவிர்க்குமாறு இந்திய விமானப் படை கேட்டுக்கொள்கிறது. உயிரிழப்புகளுக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, துயரமான இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உறுதுணையாக நிற்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து, விமானப் படை வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘விமான விபத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்ததற்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. ஸ்க்வாட்ரன் லீடர் பிரசாந்த் சிங், பிளைட் லெப்டினன்ட் சுபம் குமார், சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா, அக்னிவீர் வாயு வீரர் கேமராம் குமாவத், அக்னிவீர் வாயு வீரர் தானிஷ் ஆலம் ஆகியோர் தங்கள் கடமையின்போது இன்னுயிரை நீத்தனர்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய விமானப் படை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் துயரமான இந்த தருணத்தில் ஆவர்களுடன் உறுதுணையாக நிற்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »