Our Feeds


Saturday, July 11, 2026

Zameera

வெளிநாட்டு இலங்கையர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் விரைவில்


 வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். 


நேற்று (10) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் பிரதான உயிர்நாடியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 


தற்போது சுமார் 17 இலட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டு வருவதுடன், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் வரலாற்றில் அதிகூடிய வெளிநாட்டுப் பணம் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் வெறும் 307 தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


தற்போதைய முறையிலுள்ள நன்மைகளை அடையாளம் கண்டு, அதற்கு தீர்வாக இந்த புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதன்போது, அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான முறையை பின்பற்றாமல், அவர்களின் சேவைக்காலம் மற்றும் வருமான மட்டங்களுக்கு ஏற்ப தெரிவு செய்யக்கூடிய நெகிழ்வான தெரிவுகள் உருவாக்கப்படும். 


அதன்படி, சேவைக்கால முடிவில் மாதாந்த ஓய்வூதியமாகவோ அல்லது முதிர்ச்சியடைந்ததும் ஒரே தடவையில் மொத்தத் தொகையாகவோ பலன்களைப் பெற்றுக்கொள்ள தொழிலாளர்களுக்கு சுதந்திரம் உண்டு. 


குவைத் நிதியத்திலிருந்து வெளிநாட்டுத் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்திற்காக 2.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்ட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். 


தொழில்நுட்ப மாற்றத்துடன், வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக அனுப்பும் பணத்தை துல்லியமாகப் பதிவு செய்வதற்காக, புலம்பெயர்ந்தோருக்கான பணம் அனுப்பும் அறிக்கையைப் பெறுவதற்கு டிஜிட்டல் அமைச்சின் ஊடாக விசேட செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் மூலம், ஒவ்வொரு தொழிலாளியும் தாங்கள் அனுப்பிய மொத்தப் பணம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை (Remittance Report) இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அந்தத் தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு உரித்தான ஓய்வூதியப் பலன்கள் வெளிப்படைத்தன்மையுடன் தீர்மானிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார். 


இந்த முழுமையான நலன்புரித் திட்டமானது தொழிலாளியின் விருப்பத்தின் பேரிலேயே இடம்பெறுவதுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவை இணைந்து இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றன என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »