Our Feeds


Thursday, July 30, 2026

ShortNews

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை!


நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் நேற்று (29) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ராஜீவ் அமரசூரிய, குறித்த திருத்தச் சட்டம் இந்தச் சமயத்தில் நிறைவேற்றப்படக் கூடாது என்ற சங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரிடம் விளக்கியதாகத் தெரிவித்தார்.

நேற்று சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையை நீதி அமைச்சரிடம் கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கையானது முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதுடன், 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், ஜனாதிபதியைச் சந்தித்து இது குறித்துக் கலந்துரையாட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் சேர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை கவனமாக ஆராய்ந்து, ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னர் அமைச்சர் பதிலளிப்பார் எனத் தெரிவித்த அவர், இது குறித்து மேலும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இதனிடையே, இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான போராட்டங்கள் குறித்து எங்குமே கலந்துரையாடப்படவில்லை அல்லது அத்தகைய எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »