இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான
தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும் தொடர்ந்து பேணிக்கொண்டே, இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை வழங்குமாறு கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்து, இவ்விடயங்கள் தொடர்பாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட்டு, நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
