நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகின.
இது தொடர்பாக 'அத தெரண' நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வினவியபோது, அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிக்குமாறு தமக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டால், அது குறித்துக் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுவாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றங்களில் கணிசமான காலம் தாமதிக்கப்படுகின்றது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, நமது நீதிமன்றக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
சில நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதேவேளை, தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தும் சமூகத்தில் நிலவுகிறது.
புதிய நீதிபதிகளைப் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு இந்தத் துறையிலிருந்தே ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வழக்கமாக எண்ணிக்கையை அதிகரிக்கும்போதே வயது எல்லையையும் அதிகரிப்பார்கள், ஆனால் அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் அது செய்யப்படவும் இல்லை என்றார்.
