திசைகாட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களை ஏமாற்றியது. தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தினந்தோறும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச
நாட்டு மக்களுக்காக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நான் சேவையாற்றுவதற்கு பல்வேறு தரப்பினரும் என்னை விமர்சித்து வருகின்றனர். எனக்கும் எமது கட்சிக்கும் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி என்னுடைய அல்லது எமது கட்சியின் பிம்பத்தை வளர்த்துக் கொள்ளவும், சமூக வலைத்தளங்கள் மூலமாக பொய்களை நிலைநிறுத்தவும் எனக்கு சந்தர்ப்பம் இருந்தபோதிலும், அத்தகைய வீண் வேலைகளைச் செய்யாமல் கிடைக்கும் நிதி உதவிகளை கொண்டு நான் உண்மையாகவே மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.
டித்வா (Ditwa) புயல் தாக்கத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை பெற்றுத் தருவோம் என இவர்கள் கூறிய போதிலும், இன்று அவற்றில் எதனையும் செய்யாமல், துயரத்திற்குள்ளான மக்களுடன் இணைந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதையே அரசாங்க தரப்பினர் செய்து வருகின்றனர். இன்றும் டித்வா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு நிர்கதியடைந்த மக்கள் மேலும் நிர்கதியடைந்துபோயுள்ளனர். விவசாய மற்றும் சொத்துச் சேதங்கள், உயிரிழப்புகள், மாற்று காணிகள் மற்றும் வீடுகள் என்பவற்றுக்கு எத்தகைய பதில்களும் இல்லை. 2019 ஆம் ஆண்டைப் போலவே 2024 ஆம் ஆண்டும் தேர்தல் காலத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், தற்போது நாளாந்தம் இந்த திசைகாட்டி அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.
ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் தர்ம போதனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரால் ரூபா 2,15,000/- பெறுமதியான 100 சீமெந்து பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை பெற்றுத் தந்து, விவசாயிகளை ராஜாவாக்குவோம், விவசாயிகள் கடவுள் என்று கூறியவர்களே, இன்று விவசாயிகளைப் பார்த்து கசிப்புக்காரன் என்று அவமதித்து அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். சமகாலத்தில் பாராளுமன்றத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றிப் பேசுவதற்குக் கூட எனக்கு தடை விதித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
