சட்டவிரோதமான முறையில் 'உண்டியல்கள்' அமைப்பில் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞனை, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று செவ்வாய்க்கிழமை (18) வேல்லவீதி பொலிஸ் பிரிவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 01 கோடி 04 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா பணத்தைச் சம்பாதித்தமைக்கான சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியமை காரணமாக, பணச்சலவை சட்டத்தின் கீழும், போலியான ஆயிரம் ரூபா பணத்தாள் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டிலும் இச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
