Our Feeds


Thursday, August 6, 2026

SHAHNI RAMEES

தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார்! - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்!

 

மாணவர்கள் தலைமையிலான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தாயகம் திரும்புவதில் தனது உறுதியான முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

கைது நடவடிக்கை, சிறைத்தண்டனை அல்லது உயிரிழப்பு போன்ற எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களை விட்டு விலகி இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில், இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தனது உரையின் மூலம் ஹசீனா செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

"நான் கைது செய்யப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம் என்பதை அறிவேன். ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த அவர்கள் முயலலாம். ஆனால் அச்சம் என்பது மக்களுக்கு ஆற்ற வேண்டிய எனது கடமையை தீர்மானிக்க முடியாது," என்று அவர் கூறினார்.

ஹசீனாவின் இன்றைய உரையைக் கண்டித்து டாக்காவில் போராட்டக்காரர்கள் அவரது உருவபொம்மையைக் கொளுத்தினர்.

இந்த உரைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு பாதிக்கப்படலாம் எனப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் அரசு, இந்தியாவை எச்சரித்துள்ளது.

ஹசீனாவின் உரையில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரும், அவாமி லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதேவேளை, ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அறிவிப்பு அவாமி லீக் கட்சியினருக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, அவர் செய்த குற்றங்களுக்கு நீதிமன்றத்தில் பதிலளித்தே ஆக வேண்டும் என்று தற்போதைய ஆட்சியாளர்களும் போராட்டத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையில், ஹசீனாவின் இந்த உரையில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், ஹசீனாவின் இந்த அறிவிப்பு, அவரது அவாமி லீக் கட்சியின் எதிர்காலத்தையும் பங்களாதேஷின் தற்போதைய அரசியல் சூழலையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »