ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் பெறப்பட்டதாகக் கூறப்படும் 8 இலட்சம் அமெரிக்க டொலர் கமிஷன் பணத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டிருப்பது அநீதியானதும் சட்டவிரோதமானதுமாகும் என பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கமிஷன் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்யாமல், அவரின் வாய்மொழி வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
போதிய ஆதாரங்கள் இல்லாமல் வாய்மொழிக் கூற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கைது செய்வது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனவும் கம்மன்பில தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெறும் பேரணியில் தாம் உரையாற்றவுள்ளதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
