Our Feeds


Showing posts with label #Tranding. Show all posts
Showing posts with label #Tranding. Show all posts

Monday, October 16, 2023

News Editor

பாராளுமன்றம் நாளை கூடும்


 பாராளுமன்றம் ஒக்டோபர் 17 முதல் 20 வரை கூடவுள்ளதாகப் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.


கடந்த 6 ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.

அதற்கமைய, பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு தினத்திலும் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்குக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணிக்கு, உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய 'செனல் 4' அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதனை அடுத்து, பலபிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன், ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கக் கணக்குக் குழுவின் (COPA) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

2023 ஒக்டோபர் 18 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கௌரவிப்பை அளித்தல் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் 2339/06 மற்றும் 2347/10 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனை அடுத்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2329/46 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் 2336/72 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தீர்மானம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2334/23, 2336/69, 2338/58 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட மூன்று கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழ் 2334/24, 2340/42 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு அறிவித்தல்கள், நிதிச் சட்டத்தின் கீழ் 2329/19, 2342/24 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் மற்றும் மது வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2336/70 மற்றும் 2338/57 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு அறிவித்தல்கள் அன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்தவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 2323/41 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் 2294/54 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனை அடுத்து, பி.ப. 5 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானத்தை விவாதமின்றி அங்கீகரிப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பி.ப. 5 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு அமைய விவாதம் இடம்பெறவுள்ளது.

Wednesday, September 27, 2023

News Editor

பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியசாலை


 பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு 27.06.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

 

இது மருத்துவர்களின் தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து இராஜதுரை சுரேஸ் என்பவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று ( 26.09.2023) முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

 

தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Tuesday, September 19, 2023

News Editor

இலங்கை பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தென் கொரிய ஆதரவு


 இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார்.


இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தென்கொரிய ஜனாதிபதி பாராட்டியதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.


மேலும், எதிர்காலத்தில் இலங்கை இளைஞர்யுவதிகளுக்கு தென்கொரியாவில் பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், காலநிலை மாற்றத்தை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (18) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.  


இதன்போது தென்கொரிய ஜனாதியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதோடு, சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இரு தலைவருகளுக்குமிடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றது.  


1978 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தென்கொரியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்ச்சியாக முன் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன், தொடர்பாடல்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் நீண்ட கலந்துரையாலில் ஈடுபட்டனர்.  


இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இரு தலைவர்களும் விசேட அவதானம் செலுத்தியிருந்ததோடு, விரைவில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தத்தை கைசாத்திட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.


தற்போதும் இலங்கையின் இளைஞர் யுவதிகள் பெருமளவில் தென்கொரியாவில் தொழில் புரிகின்றனர் என்பதோடு அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றமைக்காக தென்கொரிய ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.  


அதேபோல் தென்கொரிய சேவைக் காலத்தின் பின்னர் தொழில் திறன் மிக்கவர்களாகவே அவர்கள் இலங்கை திரும்புவதாகவும், அதனால் அவர்களால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பு கிடைக்கும் எனவும் வலியுறுத்தினார்.


இதன்போது காலநிலை மாற்றங்களை மட்டுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தை விரைவில் கைசாத்திட எதிர்பார்த்திருப்பதாகவும், காலநிலை மாற்றங்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் சுட்டிக்காட்டினார்.


அதேபோல் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்திருந்த அதேநேரம், டிஜிட்டல் மயமாக்கலில் ஆச்சர்யமாக விளங்கும் தென்கொரியாவை முன்னுதாரணமாக கொள்ள முடியும் என தென்கொரிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  


விரைவில் தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் (Yoon Suk Yeol) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தார்.

Wednesday, September 13, 2023

News Editor

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தா்மன் நாளை பதவியேற்பு



சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கிறார். 



சிங்கப்பூரின் 8-ஆவது ஜனாதிபதியும், முதல் பெண் ஜனாதிபதி ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் திகதி நடைபெற்றது.



இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக தா்மன் சண்முகரத்னம் நாளை பொறுப்பேற்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Tuesday, September 5, 2023

News Editor

உலகம் முழுவதும் பரவும் ‘Pirola’


 புதிய வகை கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய வகையைப் பற்றிய சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola)  அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆரம்ப காலத்தில் பரவிய கொவிட் வைரஸின் கொடிய ஒமிக்ரோன் மாறுபாட்டை விட இந்த மாறுபாடு மிகவும் பிறழ்ந்த மாறுபாடு என்று பரிந்துரைக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இஸ்ரேல், கனடா, டென்மார்க், தென்னாபிரிக்கா, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வகை இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பைரோலாவின் புதிய திரிபு மீண்டும் உலகம் முழுவதும் தொற்றுநோய்களின் எழுச்சியை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, இருமல் மற்றும் தலைவலி ஆகியவை புதிய விகாரத்தின் அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.

News Editor

எக்காரணம் கொண்டும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது


 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை – 2023 எக்காரணம் கொண்டும் பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் திட்டமிட்டிருந்த போதிலும் 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தாமதமானதால், அதற்கான பரீட்சை நவம்பர் மாதம் 27 முதல் டிசம்பர் 21, 2023 வரை பரீட்சை நடத்தப்படும் என ஜூலை 17 ஆம் திகதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொதுவாக உயர்தரப் பெறுபேறுகள் திருத்தத்திற்கு சுமார் 04 மாதங்கள் ஆகும், இந்த ஆண்டு பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி முடிவடைந்த போதிலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துகொள்ளாத காரணத்தினால், மே 20ஆம் திகதி மற்றும் மிகக் குறுகிய காலத்திற்குள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பிள்ளைகளின் வயதைக் கருத்தில் கொண்டு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளதாகவும், மாணவர்கள் விரைவில் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியத் தேவையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 323,913 ஆகும். முந்தைய ஆண்டில், அதாவது 2022 ஆம் ஆண்டில், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 331,709 ஆக இருந்தது.

பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னரும் இரண்டாம் அல்லது மூன்றாம் தடவைக்கு தோற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பரீட்சை திணைக்களம் ஆன்லைன் அமைப்பு மூலம் வாய்ப்பு வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.