இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் குறித்தும்
அந்த அமைப்புகளின் முக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தெரிவித்தும் கூட அதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஸஹ்ரான் தேசிய பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலானவர் எனவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நான் வலியுறுத்தினேன் என
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு
முன்னிலையில் தெரிவித்தார்.
உயிர்த்த
தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க
நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மீண்டும் இராணுவ தளபதிக்கு அழைப்பு
விடுத்திருந்த நிலையில் இன்று (31) தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வந்திருந்த போதே
அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அமைப்பு குறித்து அன்று கூறியதையே
இன்றும் கூறுகிறேன். வடக்கு கிழக்கின் முன்னைய நிலைமைக்கு பின்னராக நாட்டின்
நிலைமைகள் குறித்து அதிகமாக கண்காணித்திருந்தோம். குறிப்பாக முஸ்லிம் அடிப்படைவாத
அமைப்புகள் குறித்து அவ்வப்போது பேசியிருந்தோம். இலங்கை பொலிஸ், புலனாய்வுத் துறை மற்றும் முப்படைகள் இடையில் தகவல்
பரிமாற்றப்படுகின்றது. ஆகவே இந்த அமைப்பு குறித்து தெரிந்துகொண்ட தகவகல்களை நாம்
பரிமாற்றிக் கொண்டுள்ளோம்.
இதில் இரகசிய தகவல்கள் என்னிடம் உள்ளது. சில
சந்தர்ப்பங்களில் சில நபர்களை கைது செய்யவும் நான் வலியுறுத்தியுள்ளேன். சாதாரண
நிலைமைகளில் கைதுகளை இராணுவத்தினால் முன்னெடுக்க முடியாது. அவசரகால சட்ட காலத்தின்
போது மட்டுமே அதனைச் செய்ய முடியும். எவ்வாறிருப்பினும் இந்த அமைப்புகள் அவர்களின்
தொடர்புகள் குறித்து தெரிந்துகொண்ட காரணத்தினால் தான் தாக்குதலின் பின்னர் கைதுகளை
துரிதமாக முன்னெடுக்க முடிந்தது. எனினும் இன்னும் சிலர் தப்பித்து
வெளியிலியிருந்து இயங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
