வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனின் வழக்கை விசாரணை செய்யும் குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசமின் நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம், இளம் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் வைத்தியர் ஷாபியின் மனைவி வைத்தியர் பாத்திமா இமாரா ஆகியோர் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
ஜூன் 27ம் திகதி வழக்கு விசாரணையின் போது வழக்குடன் தொடர்புபடாத குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளரின் சாட்சியங்களை பெற்றுக்கொண்டமை, வைத்தியசாலையின் பணிப்பாளர் பல் வைத்தியர் எனவும் அவரிடமிருந்து பலோப்பியன் குழாய் சம்பந்தமான கருத்துக்களை வைத்து அது தொடர்பில் தீர்ப்பு வழங்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நீதவானின் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் எனவும் முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த வழக்கு விசாரணைகளில் நீதவான் சம்பத் ஹேவாவசமை நீக்கி வேறொரு நீதவானின் கீழ் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியர் பாத்திமா இமாரா ஷாபி நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
