பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது.
குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவை திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று முன்னிலைப் படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
