உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்
நடத்தியவர்கள் மனிதத் தன்மையை இழந்த மிருகங்கள். அவர்களின் செயல்பாட்டை இஸ்லாம் ஒரு
போதும் அங்கீகரிக்காது. முழு முஸ்லிம்களும் அவர்களை புறக்கணித்து விட்டார்கள்.
பயங்கரவாதிகளின் பயங்கரவாதத்தினால்
கடந்த 04 மாதங்களுக்கு மேலாக வெளியில் வருவதற்கும் சிந்தித்த முஸ்லிம்கள் தற்போது பகிரங்கமாக
வெளியில் வரும் ஒரு சூழல் உருவாகியுள்ளது. ரமழான் பெருநாளை நாம் கழிக்கும் போது நம்மில்
பல சகோதரர்கள் அநியாயமாக சிறையில் வாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளினால்
தற்போது அவர்களும் இணைந்து புனித ஹஜ்ஜூப் பெருநாளை சந்தோஷமாக கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது.
என இன்று (12.08.2019) கொழும்பில், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) நடத்திய ஹஜ் பெருநாள்
திடல் தொழுகையில் ஆற்றப்பட்ட சிறப்புரையில் அவ்வமைப்பின் துணை தலைவர் ரஸ்மின் MISc
தெரிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் அஞ்ச
வேண்டும். மனிதர்களுக்கு பயப்படுவதற்கு நாம் குற்றவாளிகள் அல்ல. குற்றம் செய்த கயவர்களை
அடையாளம் காட்டி அவர்களை முஸ்லிம்கள் அடக்கும் மையவாடியில் கூட அடக்க இடமளிக்காத உன்னத
சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். உலகில் எந்த சமூகங்களும் செய்ய துணியாத காரியத்தை இலங்கை
சமுதாயம் செய்தது.
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக
நாம் சோதிக்கப்படுகிறோம். இந்தக் கொள்கையை அழிப்பதற்காகவே பலரும் ஒன்றிணைகிறார்கள்.
ஆனால் இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பயங்கரவாதிகள் என்று முழு முஸ்லிம்
சமுதாயத்தையும் முத்திரை குத்த நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
புத்தகம் வைத்திருந்தவர்கள்,
குர்ஆன் வைத்திருந்தவர்கள், வீட்டில் வேலைக்கு கத்தி வைத்திருந்தவர்கள், இஸ்லாமிய விளக்க
CD க்களை வைத்திருந்தவர்கள் என்று அப்பாவிகள் பலரை கைது செய்தார்கள். இதனால் இறுதியில்
நடந்தது என்ன?
வஹ்ஹாபிசம் என்று இஸ்லாமிய ஏகத்துவ
கொள்கையை அழிக்க நினைத்தவர்கள் வஹாபிஸத்தை தேடிப் படிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தவ்ஹீத் என்றால் பயங்கரவாதம்
என ஓரங்கட்ட நினைத்தவர்கள் தவ்ஹீத் பற்றி படிக்கும் நிலை உருவாகியுள்ளது.
குர்ஆனை கேட்டு வாங்கி படிக்கும்
பலர் இன்று உருவாகி விட்டார்கள். ஊடகங்களும் இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களுமே குர்ஆனை
தேடிப்படிக்கும் நிலையையும் உருவாக்கி விட்டார்கள். இது அல்லாஹ் செய்த பெரும் அருள்.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின்
பின்னரே அமெரிக்கர்களில் பலர் இஸ்லாத்தை பற்றி தேடினார்கள். குர்ஆனை அதிகமாக வாசிக்க
விரும்பினார்கள்.
ஈராக் போரின் பின்னர் பிரித்தானியா
இஸ்லாத்தை தேட ஆரம்பித்தது.
ஆப்கான் போரின் பின்னர் ஐரோப்பிய
நாடுகள் இஸ்லாத்தை பற்றி அதிகம் தேட ஆரம்பித்தார்கள்.
இலங்கை குண்டு வெடிப்பின் பின்னர்
இந்நிலை அதிகரித்துள்ளது. குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த சில காடையர்கள்
என்பதினால் முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இன்று அந்த
நிலை தலைகீழாகி விட்டது.
இனவாதம் பேசியவர்கள் குர்ஆனை
கேட்டு வாங்கும் நிலை உருவாகி விட்டது. இனவாதத்திற்கு தூபமிட்டவர்கள் சிங்கள மொழி குர்ஆனை
படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
குண்டு வெடிப்பு தொடர்பில் ஆராயும்
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்ற நேரம் அங்கிருந்தவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட
சிங்கள குர்ஆன் மொழி பெயர்ப்புகளை வழங்கி வந்தோம். தற்போது நம் தலைமையகம் தேடி வந்து
குர்ஆனை பெற்றுக் கொள்ள ஆர்வப்படுகிறார்கள்.
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மூன்று,
நான்கு மாதங்களுக்கு மேல் பட்ட துன்பத்திற்கும் துயரத்திற்கும் அல்லாஹ் தந்த வெற்றியே
குர்ஆனைப் பற்றிய மாற்று சமூகத்தின் தேடல்.
சிங்கள மொழியில் குர்ஆனை அதிகமாக
மாற்று சமூகத்தினர் கேட்கிறார்கள். முடிந்தளவு வழங்கி வருகிறோம். அவர்களுக்கு குர்ஆனை
அதிகமாக கொண்டு சேர்க்கும் விதமாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிங்கள குர்ஆன் மொழி
பெயர்ப்பு மீள் பதிப்பு செய்யப்படவுள்ளது என்ற இனிப்பான செய்தியையும் இந்த இடத்தில்
கூறிக் கொள்கிறோம்.
