குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் சாபி தொடர்பில் விசாரணை முன்னெடுக்கும் போது குருணாகல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரினால் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர தெரிவித்துள்ளார்.
வைத்தியர் சாபிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் முன்னெடுத்த விசாரணைகளின் போது இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பணிப்பாளர் சானி அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் விடய உள்ளடக்கங்களுக்கு ஏற்ப பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (08) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
