Our Feeds


Wednesday, September 11, 2019

www.shortnews.lk

ரனிலுடனான சந்திப்பின் விளைவை எதிர்வரும் நாட்களில் காண்பீர்கள் - சஜித் பிரேமதாச

 


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியுமென அமைச்சரும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக இன்று இரவு அமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச  அலரி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுற்ற நிலையில் அலரிமாளிகைக்கு வெளியில் நின்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 
கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
அதோபோன்று எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம்.
ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது.
இதேவேளை, இன்றைய கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காணமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி, சிறுபான்மை கட்சித் தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »