நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை
ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்பு சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28) செவ்வாய்க்கிழமை மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் நடைபெற்றது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த விஷேட நிகழ்வின் போது, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மர்ஷாத் பாரி உட்பட ஏழு பேரைக் கொண்ட வக்பு சபை உறுப்பினர்கள் பிரதி அமைச்சரிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த நியமனமானது மூன்று ஆண்டுகாலத்திற்கு செல்லுபடியாகும்.
பிரதி அமைச்சர் முனீர் முழப்பரிடமிருந்து நியமனம் பெற்ற வக்பு சபையின் புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு :
1. எம்.மர்ஷட் பாரி (தலைவர்)
2. அஷ்-ஷைக் எம்.எஸ்.எம்.இஹ்ஸான் ரஷாதி
3. எம்.வை.ஏ.ரிபாக் அஹமட்
4. ஏ.எம்.ஜே.எம்.ஜவ்பர்
5. சட்டத்தரணி செய்னுல் மசூதீன்
6. எம்.ஏ.எம்.அரூஸ்
7. எம்.ஐ.அமினுடீன்
இந் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், முஸ்லிம் மத அமைப்புகளின் நிர்வாக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதும் புதிய சபையின் பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூர்வமாகவும் நியாயமான முறையில் தீர்க்க புதிய தலைவர் மற்றும் குழுவினர் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் மத மற்றும் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
