மாணவி கைகொடுத்தபோது, கவனிக்காமல் இளவரசர் சென்றுவிட்டார். பின்னர், நடந்தது என்ன?
துபாய், ஷார்ஜா, அபுதாபி, ஆஜ்மன் உள்ளிட்ட 7 நகரங்களை அடங்கிய பகுதிதான் ஐக்கிய அரபு அமீரகம். அபுதாபி இந்த நாட்டின் தலைநகரம். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஷயாத் அல் நயான் சற்று வித்தியாசமானவர். மக்கள் மீது பேரன்பு கொண்டவர்.
இளவரசர் ஷேக் முகமது அமீரக ராணுவத்தின் தலைவரும்கூட. எந்த ஒரு விஷயத்தையும் மனிதாபிமானத்துடன் அணுகுபவர். குழந்தைகள் மீது பெரும் அக்கறை கொண்டவர்.
நிகழ்ச்சி ஒன்றில், தனக்குக் கை கொடுக்க முயன்று, முடியாமல்போன சிறுமியின் வீட்டுக்கே சென்று இளவரசர் ஷேக் முகமது வாழ்த்தியதுதான் இப்போது அமீரகத்தில் ஹாட் டாபிக். இரு நாள்களுக்கு முன், அபுதாபிக்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் வருகை தந்தார். அபுதாபி அரண்மனையில் சவுதி இளவரசரை வரவேற்க, பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆயிஷா என்ற மாணவியும் அதில் ஒருவர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு பக்கத்தில் சவுதி இளவரசரும் மற்றொரு பக்கத்தில் அபுதாபி இளவரசரும் கை கொடுத்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தனர். சவுதி இளவரசர் வந்த பக்கத்தில் மாணவி ஆயிஷா நின்றுகொண்டிருந்தார். ஆயிஷாவுக்கோ தங்கள் நாட்டு இளவரசர் ஷேக் முகமதுக்குக் கை கொடுக்கவே ஆசை. உடனடியாக ,ஷேக் முகமது வரும் எதிர் பக்கத்துக்கு ஓடிச் சென்று இளவரசர் ஷேக் முகமதுவுக்குக் கை கொடுக்க முயன்றார். ஆனால், இளவரசர் ஷேக் முகமது ஆயிஷா கை கொடுப்பதை கவனிக்காமலேயே சென்றுவிட்டார். இதனால், ஆயிஷாவின் முகம் வருத்தத்தில் வாடிப்போனது.
![]() |
| சிறுமி ஆயிஷாவுடன் இளவரசர் |
அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பின் ஷயாத் இளவரசருக்கு ஆயிஷா கைகொடுக்க முயன்று முடியாமல்போன வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து இளவரசர் ஷேக் முகமதுவுக்கும் விஷயம் எட்டியது. 'மாணவி வருந்தும் வகையில் நடந்துவிட்டதே..!' என இளவரசர் மனதுக்குள் கருதினார். உடனடியாக மாணவியின் வீட்டைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், சர்ப்பரைஸாக மாணவியின் வீட்டுக்குச் சென்று ஆயிஷாவின் முன் நின்றார் இளவரசர். மாணவியால் இந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. தன்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டார்.
![]() |
| சிறுமி ஆயிஷாவின் உறவினர்களுடன் உறவாடும் இளவரசர் |
நாட்டு இளவரசரா தங்கள் வீட்டுக்கு வந்திருப்பது என ஆயிஷாவின் பெற்றோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். மாணவியின் நெற்றியில் முத்தம் கொடுத்த இளவரசர், பரிசும் கொடுத்து வாழ்த்தினார். ஆயிஷாவின் படிப்பு குறித்து இளவரசர் கேட்டறிந்தார். தன் ட்விட்டர் பக்கத்திலும் மாணவியுடன் இருக்கும் புகைப்படங்களை இளவரசர் பகிர 25,000 லைக்குகள் அள்ளியதோடு 9,000 முறை ரீ ட்வீட்டும் செய்யப்பட்டது. இளவரசரின் மனிதாபிமான செயலுக்கு, பல முனைகளிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.


