ACJU/NGS/2026/59
2026.04.29 (1447.11.11)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆரம்ப
காலம் தொடக்கம் இன்றுவரை, எமது நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதர இனத்தவர்களுடன் சகவாழ்வுடனும் வாழ வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவது தாங்கள் அறிந்த விடயமாகும்.2009ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் சமூகம் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்ற நோக்கில், ஜம்இய்யா ஒற்றுமையை வலியுறுத்தும் ‘ஒற்றுமைப் பிரகடனம்’ என்ற நூலை வெளியிட்டது.
மேலும், வெளிநாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில், 2015ஆம் ஆண்டு அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து, இலங்கை முஸ்லிம்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாக பிரகடனப்படுத்தின.
2019ஆம் ஆண்டு, நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.
இந்த சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைவதே வழியாகும் என்று உணர்ந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்திற்கு உட்பட்ட பல்வேறு சிந்தனை முகாம்களைச் சேர்ந்த ஆலிம்களை ஒன்றுசேர்த்து தொடர் முயற்சிகளின் பின்னர், அனைவரதும் ஒப்புதலுடன் ‘மன்ஹஜ்’ (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) என்ற நூலை 2022.01.30 அன்று வெளியிட்டது.
குறித்த ‘மன்ஹஜை’ சகல தரப்பினருக்கும் அறிமுகப்படுத்தியிருப்பதுடன், அதன் அடிப்படையில் நாம் ஒற்றுமையாக செயல்பட்டு பல நலவுகளை அடைந்து வருகின்றோம்.
இச்சூழ்நிலையில், ‘அல்-மன்ஹஜுஸ் ஸஹீஹ்’ எனும் பெயரில் புதிய வெளியீட்டை ஒரு குழுவினர் அறிமுகப்படுத்த உள்ளதாக ஜம்இய்யாவுக்கு தெரியவந்துள்ளது; இந்த வெளியீட்டுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுடன் ஏற்கனவே ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்டுள்ள ‘மன்ஹஜ்’ இன் (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) அடிப்படையில் தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுமாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஜம்இய்யா கேட்டுக்கொள்கிறது.
எனவே, ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஜம்இய்யா வினயமாக வேண்டிக் கொள்கிறது.
“யா அல்லாஹ்! எங்கள் இதயங்களை ஒன்றிணைத்து, எங்களுக்குள் உள்ள உறவுகளைச் சீர்செய்து, எங்களை சமாதானத்தின் பாதைகளுக்கு வழிநடத்துவாயாக!”
ஆமீன்..!
நிறைவேற்றுக் குழு சார்பாக:
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
