முன்னாள்
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் இருவருடன் ஊடகவியலாளர் சந்திப்பை
நடாத்தி, கொலை, வெள்ளை
வேன் கடத்தல்,
சித்திரவதை, கொள்ளை உள்ளிட்ட தகவல்களை வெளிப்படுத்திய
விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும், அவர்கள்
ஊடக சந்திப்பில் கூறிய விடயங்களை திருத்தி மாற்றிக் கூற முற்பட்டால் உண்மையிலேயே
வெள்ளை வேனில் செல்ல நேரிடும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அச்சுறுத்தியதாக, சந்தேக
நபர்கள் தமது வாக்கு மூலத்தில் கூறியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
விசேட விசாரணைப் பிரிவுக்கு அவர்கள் வழங்கியுள்ள வாக்குமூலத்தை சி.சி.டி.
கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.
அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சாரதியாக தொழில் புரிந்துவரும் தான், கடந்த
அக்டோபர் மாதம் 22 அல்லது அதனை அண்மித்த தினம் ஒன்றில் தனது சகோதரனான
உப்புல் துஷார என்பவருடன் இணைந்து அசங்க என்பவரின் வீட்டுக்குச் சென்று
அங்கு மதுபானம் அருந்தினோம், இதன்போது அங்கிருந்த இன்னுமொரு நபரான அத்துல
சஞ்சீவ என்பவர், அவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் ஒன்று
தொடர்பிலும், இதன் பின்னர் இடம்பெற்ற கைது மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட
சம்பவம் தொடர்பிலும் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்
தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு பின்னர் தனது சகோதரனான உப்புல்
துஷார என்பவர் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜித
சேனாரத்தினவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நாளொன்றை தெரிவு செய்துள்ளதாக
கூறியதாகவும், அதற்கு அவர் ஏன் இந்த சந்திப்பு என்று வினவியபோது வெள்ளைவேன்
தொடர்பில் ஊடகச் சந்திப்பை மேற்கொள்வதற்கு என்று தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
பின்னர்
இந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கப்படும் என்று
சகோதரர் தெரிவித்ததனால்தான் அதற்கு இணக்கம் தெரிவித்த சந்தேக நபர், பின்னர்
முன்னாள் அமைச்சர் ராஜிதவை சந்திப்பதற்கான திகதி குறிக்கப்பட்டதாகவும்
இதற்கு இவர்கள் சம்மதித்தவுடன் அவர்களை அழைத்துச் செல்ல கார் ஒன்று அனுப்பப்பட்டதாகவும்
கூறினார்.
கடந்த
அக்டோபர் 25 ஆம்
திகதிக்கும் 30 ஆம்
திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில்
அமைந்துள்ள ராஜிதவின் வீட்டுக்கு இரவு 10 மணியளவில் சென்று அவரைச் சந்தித்தபோது, அவர்
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பான விபரத்தை கேட்டறிந்தார். பின்னர் அதன்
முதற் பிரதி என்னிடம் இருக்கிறது.
இறுதிப்
பகுதிதான் தேவை என்று கூறிவிட்டு இதற்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களை
நான் தருகின்றேன் என்றார். பின்னர் ராஜிதவுடன் இருந்த முஸ்லிம் நபர்கள் சிலர்
இதற்காக உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று கேட்டார்கள். நாங்கள் எங்களுக்கு
30
இலட்சம் ரூபாவை கொடுக்குமாறு கேட்டபோது அவர்கள் தொகையை குறைக்கமுடியாதா
என்று கேட்டார்கள் என்றும் கூறியுள்ள சந்தேக நபர், இதன்போது
ராஜித நாங்கள் இத்துடன் உங்களை கைவிடமாட்டோம், உங்கள்
இருவருக்கும் இரு வீடுகளை வழங்குவதுடன், அமெரிக்க தூதரகத்தில் தொழிலாளியாக
பணிபுரிவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து, குடும்பத்துடன்
அமெரிக்கா அனுப்புவதாகவும் கூறினார்.
பின்னர்
20
இலட்சம் ரூபா என்று உடன்பாட்டுக்கு வந்தோம் என்றும் கூறியுள்ளார்.இணக்கம் தெரிவித்ததையடுத்து
தனக்கு ஒரு பிரதியொன்றை கொடுத்து அதனை மனனம் செய்துக் கொள்ளுமாறு ராஜித அறிவித்ததாகவும், ஆனால்
அத்துலவுக்கு இது வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.நவம்பர் மாதம் 10 ஆம்
திகதி காலை 5 மணியளவில்
வாகனம் ஒன்றை அனுப்பி அழைத்துச் சென்று அங்கு முகமாற்றத்தை செய்துகொண்டு முற்பகல்
10 மணியளவில்
வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அங்கு ஒருவர் வந்து அச்சமடைய
வேண்டாம் இது என்னுடைய இடம் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ள சந்தேக நபர், அரை
மணித்தியாலம் கழிந்ததின் பின்னர் பைல் ஒன்றை கொடுத்து பின்னர் 20
இலட்சம் ரூபா பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதன்போது
அங்கிருந்த இன்னுமொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது , அங்கு
ராஜித இருந்தார். எல்லாம் சரிதானே என்றுக் கேட்டார். சிக்கல்கள் ஏற்படும்
இடங்கள் காணப்பட்டால் அதனை அவர் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்ததாக
கூறியுள்ளார்.
இந்தச்
சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபரான வட்டரெக்கே அத்துல சஞ்சீவ மதநாயக்க
தெரிவித்துள்ளதாவது,
முச்சக்கரவண்டியின் சாரதியான தன்னைக் கடந்த 2013 ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் ராகம ரயில் நிலையத்துக்கு வைத்து யாழ்ப்பாணத்திலிருந்து
கொழும்புக்கு எடுத்துவரப்பட்ட தங்கம் மற்றும் யூரோக்களை கொள்ளையிட்டமை
தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சமன் மற்றும் தாஸ்
ஆகியோரின் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.
2013
நவம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு குற்றப்பிரிவில் தன்னை ஒப்படைத்ததுடன், தடுப்புக்காவல்
பெறப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.இவ்வாறு
சிறைவைக்கப்பட்டு விடுதலையாகி வந்திருந்தபோதே தானும் சரத்துடன் அமைச்சரைச்
சந்திக்க சென்றதாகவும் அதன்போதே ராஜித்தவை முதன் முதலாக சந்தித்ததாகவும்
தெரிவித்ததுடன் சந்திப்பின்போது அமைச்சரின் செயலாளரும் இருந்ததுடன்
அவர் முஸ்லிம் இனத்தவர் என்றும் கூறியுள்ளார்.
அமைச்சரிடம்
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து அவர் அந்த தங்க நகைகளும், யூரோக்களும்
விடுதலைப புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடையது என்றும் அதனை கொழும்புக்கு
எடுத்துவந்து நகைமாளிகை ஒன்றுக்கு கொடுத்ததன் பின்னர் , இவர்கள்
அதற்கான பணத்தை அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி கோட்டாபய
ராஜக்பக்ஷவுக்கு வழங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்குமாறு
கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
இதற்காக
வீடு மற்றும் அமெரிக்கா தூதரங்கத்தில் தொழில் வாய்ப்பு மற்றும் பல சலுகைகளை
வழங்குவதாக ராஜித்த கூறியதாகவும் அதற்கு பின்னர் இதன் முதற் பகுதி என்னிடம்
இருக்கின்றது, மிகுதியை நீடித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்
கொண்டார். பின்னர் தன்னை வெளியில் செல்லுமாறு கூறிவிட்டு சரத்தை மட்டும் தடுத்துவைத்திருந்து
10 நிமிடம் கழித்து வெளியில் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
காரில்
வந்துகொண்டிருந்தபோது வெள்ளைவேன் சம்பவம் தொடர்பில் அமைச்சருக்கு இராணுவத்தின்
கெப்டன் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் , அதற்கேற்றாப்போல் நடிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும்
சரத் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
ஊடகசந்திப்பில்
கலந்துகொண்டபோது 20 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் அங்கு இருந்தனர்.
இதன்போது ராஜித்த, சரத்தை வெள்ளைவேனின் சாரதியாக கடமையாற்றியவர்
என்று தெரிவித்து, அவரை அந்தனி டக்லஸ் பெர்னாண்டோ என்று பெயரை மாற்றி
அறிமுகப்படுத்தினார். என்றும் தன்னைச் சொந்த பெயரிலேயே அறிமுகப்படுத்தியதாகவும்
தெரிவித்துள்ளார்.
இதன்போது
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தன்மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பான தகவல்களையே
தான் தெரிவித்ததாகவும் பின்னர் ராஜித்தவின் ஆலோசனைக்கமைய செயற்பட்டதாகவும்
கூறியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோது
பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தில் இவ்வாறு தெரியப்படுத்தியதாக அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள்
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கடத்தல், கொலை மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக
குறிப்பிடப்பட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் 72 மணித்தியாலயங்கள்
தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில், கொழும்பு
நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 27 ஆம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
