ஜாகிர் நாயக் தொடர்பாக மலேசிய பல்கலைக்கழகம் ஒன்றின் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைக்குரிய கேள்வி தேர்வில் இடம்பெற்றது குறித்து விசாரணை நடந்து வருவதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகம் (UniMAP) அண்மையில் இன உறவுகள் தொடர்பான பாடத்துக்குரிய தேர்வை நடத்தியது. அதில்தான் சர்ச்சைக்கு வித்திட்ட கேள்வி இடம்பெற்றிருந்தது.
"ஸாகிர் நாயக் இஸ்லாமிய உலகத்தின் அடையாளம் (மேதை). உண்மையான இஸ்லாத்தை பரப்புவதில் அவர் தீவிரமாக உள்ளார். குர்ஆனைப் பின்பற்றுகிறார். "தம்மிடம் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்குமான காரணத்தையும் பதில்களையும் அவரால் அளிக்க முடிகிறது. எனினும் மலேசியாவில் அவர் தனது சமயப் பிரசங்கம் செய்ய அனுமதி இல்லை. ஒரு மலேசிய குடிமகனாக ஏன் இவ்வாறு நடந்தது? என்பது குறித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்."
இதுதான் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.
இதற்கு கீழ்கண்ட நான்கு பதில்களை குறிப்பிட்டு, அதில் ஏதேனும் ஒரு பதிலை மாணவர்கள் தேர்வு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
1. மலேசியர்கள் தகவல்களைப் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை.
2. மலேசியர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். காரணமின்றி தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக நினைப்பவர்கள்.
3. மலேசியர்கள் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒரு கூட்டத்தின் பின்னே செல்லக் கூடியவர்கள்.
4. மலேசியர்கள் தங்களது மதங்கள் குறித்தே அறிந்திராதவர்கள்.
இந்த நான்கு பதில்களும் ஜாகிர் நாயக்குக்கு ஆதரவான கருத்துகளைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
