
புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் சர்வ மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
இரண்டாம் புனேகபாகு மன்னனின் அரசசபை மண்டபத்தை இடித்தமை தொடர்பில் குருநாகல்
நகர பிதாவை கைது செய்வதற்கு பிடியானை பிறப்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு மேன்முறையீட்டின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை
உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த
செயற்பாட்டின் ஊடாகவே அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கூற்றிற்கான
விளக்கத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.
தொல்பொருள் பாதுகாப்பு சட்டத்தின் பலம் அனைவரும் அறிந்த விடயம். தொல்பொருளியல்
சிறப்புரிமை மிக்க பொருட்களுக்கு சிறு சேதங்களை ஏற்படுத்தியவர்கள் கூட இன்று
சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அமைச்சர் ஜொன்ஷ்டன் பெர்னாண்டோ கூறியதைப் போன்றே
குருநாகல் நகரபிதாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொல்பொருளியல்
சக்கரவர்த்தியான எல்லாவல மேதானந்த தேரரதும் நாட்டு மக்களதும் நம்பிக்கை
தோல்வியுற்றுள்ளது.
கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்
விநியோகத்தடைக்கு அமைச்சு காரணமெனில் மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பதவி
விலகுவதாக தெரிவித்தார். மின் துண்டிப்புகள் ஏற்படுவது வழமை என்றாலும், அதனை நீண்ட நேரம் வரை நிவர்த்தி செய்ய முடியாமல் போவது பாரிய சிக்கலாகும்.
ஆளும் தரப்பினர் நாட்டுக்கு பொருத்தமற்ற அணல் மின் உற்பத்தி நிலையங்களை
உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பிலே அக்கறை செலுத்துவர். மின்சார
விநியோகத்தின் மூலம் கடந்த காலங்களில் மேசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இந்த மோசடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் பட்டம் பெற்றுக் கொண்டு முகாமைத்துவ உதவியாலர்களாகவும் , சாதாரண தொழிலாளர்களாகவும் , அரச , தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எந்த பாகுபாடும் இன்றி அனைவருக்கும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும். இது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.