Our Feeds


Thursday, September 3, 2020

www.shortnews.lk

தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள்” - அலி சப்ரி ரஹீம் எம்.பி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

 


புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,


“புத்தளம் தேர்தல் தொகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் சுமார் 70% வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் சுமார் 25% வாழ்கின்றனர். குறிப்பாக, புத்தளம், கல்பிட்டி, முந்தல், உடப்பு, நுரைச்சோலை மற்றும் வணாத்தவில்லு பொலிஸ் பிரிவுகளில் வாழ்பவர்களில், பெரும்பாலானோர் தமிழ் பேசுவோர்களாக இருக்கின்ற போதும், அவர்கள் தத்தமது பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்யவும், ஏனைய கருமங்களை ஆற்றுவதற்கு செல்கின்ற போதும், சிங்கள மொழி தெரியாத காரணத்தினால், தங்களுடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை கட்டாயமாக அழைத்துச் செல்லும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். அதுமாத்திரமின்றி, தமது மனதில் உள்ள விடயங்களை அச்சொட்டாக உள்ளபடி வெளிப்படுத்துவதில் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


எனவே, பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனது கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளதால், பதில் பொலிஸ்மா அதிபராகிய நீங்கள் இதில் உரிய கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றேன்.


தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட, முறைப்பாடுகளை பதிவு செய்யக்கூடிய மற்றும் சரளமாக உரையாடக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இடங்களிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும், குறிப்பாக நியமித்து உதவுமாறு கோரிக்கை  விடுக்கின்றேன்” என்று அலி சப்ரி ரஹீம் எம்.பி தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.     

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »