சம்மாந்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக செயற்பட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை சந்தித்தது கலந்துரையாடியது.
இந்தச் சந்திப்பில் திருப்திகரமான முடிவு கிடைத்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதே தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை என்னுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் பங்கேற்றனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் அந்த டிப்போவின் தேவைகள் பற்றியும், மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் தனது நிலைப்பாட்டை கைவிடுவதாக உறுதியளித்தார்.
மேலும் டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் நிலைப்பாட்டை இரத்துச் செய்துள்ள விடயத்தை அமுல்படுத்தி அந்த டிப்போவை மேலும் அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி இந்த டிப்போவின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தலைமையிலான குழுவொன்று கள விஜயம் செய்ய உள்ளது என்றார்.