(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மாகாண எல்லைப் பகுதிகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்களில் பயணித்த 215 பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதன்போது அடையாள அட்டை இறுதி இலக்க விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று (19) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 10, 413 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மேல்மாகாணத்திற்குள் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையில் 64 அங்காடி விற்பனையாளர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன் , அவர்கள் அனைவருமே முகக்கவசம் அணிந்தே விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது , பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை ஆறு மணிவரையிலும், அடையாள அட்டையின் இறுதி இலக்க விதிமுறை தொடர்பில் கண்காணிக்கப்பட்டது. இதன்போது 9,793 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உரிய விதிமுறைகளை மீறியதாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாணத்தின் எல்லை பகுதிகளில் இடம்பெற்றுவரும் சோதனை நடவடிக்கையின் போது 2, 568 வாகனங்களில் பயணித்த 4,942 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். இதன்போது மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் , இந்த வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த 215 பேரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.
