நாடு முழுவதும் 14 நாட்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என இலங்கை வைத்திய சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.
இந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வைத்திய சங்கம், அரச வைத்திய சங்கம், விசேட வைத்தியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.
மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், கொரோனா வைரஸ் பரலை கட்டுப்படுத்துவதற்கு போதுமான கட்டுப்பாடுகள் கிடையாது என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா பரலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், 14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்குவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்
