(எம்.எப்.எம்.பஸீர்)
அம்பாறை – வலகம்புர பகுதியில் அண்மையில் உயிரிழந்த கொரோனா தொற்றுக்கு உள்ளான இளைஞரின் மரணத்துக்கு, இந்தியாவில் பரவிவரும் கறுப்பு பூஞ்சை நோய் காரணமல்ல என மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்பாறை பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் உபுல் விஜேநாயக்க உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து பரவும் ஊடகங்களிலும் சமூக வலைதலங்களிலும் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் பரிமாற்றப்பட்டுவரும் நிலையிலேயே வைத்திய அத்தியட்சகர் உபுல் விஜேநாயக்க இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வைத்திய அத்தியட்சகர் உபுல் விஜே நாயக்க தெளிவுபடுத்துகையில் குறித்த நோயாளி, அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது, காச நோயினால் பாதிக்கப்பட்டு அதன் உச்சக் கட்டதை அடைந்திருந்தார். பல காலமாக அவர் காச நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றிருக்காத நிலையிலேயே அவ்வாறான கவலைக்கிடமான நிலையை அவர் அடைந்திருந்தார். சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும்போதும் அவர் மயக்க நிலையில் இருந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையின் போதே கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டார்.
அப்போதும் அவரது மூளையில் ஒரு வகை பூஞ்சை பரவியிருந்தது. அவருக்கு அது தொடர்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவரது நிலைமை கவலைக் கிடமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு காரணம், இந்தியாவில் பரவிவரும் கறுப்பு பூஞ்சை நோய் அல்ல.
இலங்கையில் பூஞ்சை நோய் பலவருடங்களாக பதிவாகியுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஞ்சை நோய்களால் அதிக ஆபத்து ஏற்படும்.
இதேவேளை, வருடத்துக்கு இவ்வாறான நோயாளிகள் மூன்று நான்கு பேர் எமது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வருவார்கள். காச நோய் காரணமாக ஏற்பட்ட ஒரு வகை பூஞ்சை மூளையை தாக்கியதால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த நுண்ணுயிரியல் விசேட வைத்திய நிபுணர் உபுல் பிரியதர்ஷன அதனை உறுதி செய்தார்.
