(எம்.எப்.எம்.பஸீர்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பின் பக்கத்தின் அடிப்பகுதி கடலின் தரையை தொட்டு 36 மணி நேரம் கடந்துள்ள நிலையில் எந்த எண்னெய்க் கசிவும் இதுவரை பதிவாகவில்லை என துறைமுக மா அதிபர் ( ஹாபர் மாஸ்டர்) கெப்டன் நிர்மல் சில்வா தெரிவித்தார். ஊடகவியாளர்களை கப்பல் விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது அவர் இதனைக் கூறினார்.
இந்நிலையில், கப்பலில் தீ பரவல் ஆரம்பித்து ஆபத்தான நிலையை அடைந்தது முதல் இலங்கை என்ஓஎஸ்சிபி எனப்படும் எண்ணெய்க் கசிவு தடுப்பு உடன் நடவடிக்கை திட்டத்தை அமுல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எண்ணெய்க் கசிவு இதுவரை அவதானிக்கப்படாத நிலையில், கப்பலை சூழ பாதுகாப்பு மற்றும் அவசர திட்டங்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் தற்போது நிலவும் கால நிலை எண்ணெய் அகற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் சவாலாக அமையலாம் எனவும் அவர் கூறினார்.
