“இணையவழி கற்றலை மாணவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்த அரசாங்கம், இணையத்தில் மதுபான விற்பனை முன்னெடுக்கவுள்ள நிலையில், இவர்களால் எரிபொருள் விலையேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் ஆச்சிரியப்படவில்லை” என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் மரிக்கார், “எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் உண்மையான தேசபக்தியுடையவர்கள் என்றால், நாம் முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “எரிபொருள் விடயானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தேசபக்தி உள்ளவராகவே இந்த நாட்டில் தம்மை இனங்காட்டிக்கொண்டார்.
நிதியமைச்சர் அல்லது அமைச்சரவை உபகுழுவானது பொருள்களின் விலையை குறைக்கவே உள்ளது. ஆனால், அவர்களே எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கும் போது, இந்த தேசபக்தியுடையவர் கண்டிப்பாக இதற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அவர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமையால், அவர் உண்மையான தேசபக்தியாளர் இல்லை என்பது புரிந்துள்ளது. அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் இந்த எரிபொருள் விலையேற்றம் அநீதியானது என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த எரிபொருள் விலையேறத்துக்கான பொறுப்பை அமைச்சர் ஏற்று பதவி விலக வேண்டும் என்றார்.
எனவே, இவ்வாறு கூறியவர்கள் உண்மையிலேயே மக்கள் பக்கம் என்றால் நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய காலம் இதோ வந்துள்ளது. நாம் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா அல்லது அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை இரத்துச் செய்வீர்களா என கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மரணித்த சடலங்களுக்கு உயிரை கொடுத்து பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்துக்கு முடியாதென தெரிவித்த அவர், இந்த பின்வரிசை உறுப்பினர்களின் பொய் தேசபக்தி வெளியே வரத் தயாராகவுள்ளது என்றார்.
