எரிபொருள் விலையேற்றை கண்டித்தும், அதிகரிக்கப்பட்ட விலையை குறைக்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினர், சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கோஷங்களையும் எழுப்புகின்றனர். இதனால், சபைக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கோஷங்களுக்கு மத்தியிலும் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவருமே கேள்விகளை கேட்கவில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்த சாந்த பண்டார கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
அக்கேள்விக்கான பதில்கள், சபையில் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளும் கட்சியின் எம்.பியான சாந்த பண்டார,
“இவர்கள், இன்று ரணில் விக்கிரமசிங்க எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்தமையை எதிர்த்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரணிலுக்கு இவர்கள், அஞ்சுகின்றனர். ஆனால், நாங்கள் அவருக்கு (ரணிலுக்கு) வாழ்த்துத் தெரிவிக்கின்றோம்” என்றார்.