பா.நிரோஸ்
ஷானி அபேசேகரவுக்குப் பிணை வழங்கி, மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசாங்கத்தின் கன்னத்தில் அறைந்துள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் (22) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் பழிவாங்கல்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த ஜிஎஸ்பி வரிச்சலுகை இல்லாமல்
போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
சி.ஐ.டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு எதிராக சாட்சிகள் சோடிக்கப்பட்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஷானியின் பிணை மனு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பினூடாக, அரசாங்கத்தின் கன்னத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.