நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், உயிரிழந்த சிறுமி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
டயகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாத்தின் வீட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகுமென அவர் தெரிவித்துள்ளார்.
பொரளை பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி நேற்றைய தினம் (15) உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.