(எம்.மனோசித்ரா)
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி, மைத்துனர் மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் இன்று (24) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி மூவரையும் 48 மணி நேரம் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ரிஷாத் பதியுதீன் மனைவி , மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரை இன்று சனிக்கிழமை காலை கொழும்பு – புதுக்கடை இலக்கம் – 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சிறுமி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் மனித வர்த்தகம் உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்தமை தொடர்பிலும் முன்னாள் அமைச்சரின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிரந்தனர்..
இது தவிர இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது உயிரிழந்த சிறுமி குறித்த வீட்டில் பணிபுரிவதற்கு முன்னர் அங்கு பணிபுரிந்த பிறிதொரு பெண் ஒருவரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண்ணும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்..
இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான ரிஷாத் பதியுதீனின் மைத்துனரையும் தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.