Our Feeds


Monday, July 5, 2021

www.shortnews.lk

திருடிய குளிர்சாதன பெட்டியை 4 KM தூரம் தோள்களில் தூக்கி சென்று விற்பனை செய்த நால்வர் கம்பளையில் கைது!

 



(கம்பளை நிருபர்)


கம்பளை மாவதுறை பிரதேச வீடு ஒன்றில் திருடப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான குளிர்சாதன பெட்டியை நான்கு கிலோமீற்றர் தூரத்துக்கு தோளில் சுமந்து சென்று 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நால்வரைக் கைது செய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த வீட்டின் உரிமையாளர்களான தம்பதிகள் கொழும்பில் கடமையாற்றி வந்த நிலையில் பயணக்கட்டுப்பாடு காரணமாக தமது மாவதுறை வீட்டுக்கு வெகு நாளாக வர முடியாதிருந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையிலேயே சந்தேக நபர்கள் இரு தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டு கதவை உடைத்து கொண்டு உட்புகுந்து புதிதாக கொள்வனவு செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான குளிர்சாதன பெட்டியைத் திருடி அதனை சுமார் நான்கு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள கம்பளை மரியாவத்தை பிரதேசத்துக்கு நால்வரும் தங்கள் தோள்களில் சுமந்து சென்று பின்னர் அதனை முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர்

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டு மாவத்துறை வெளிகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்

இன்று (05) காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்போது குளிர்சாதனை பெட்டியை விற்பனை செய்து பெற்றுக்கொண்ட பணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளையும் கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளது

சந்தேக நபர்களை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »