(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அந்த முரண்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்கள் வசமுள்ள பதவிகள் திட்டமிட்ட வகையில் பறிக்கப்படுகின்றன. கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த உர நிறுவனம் அடிப்படை காரணிகள் ஏதுமின்றி விவசாயத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
கூட்டணி அமைத்துள்ளோம் என்பதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் பங்காளி கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது. வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரிவசம் செயற்பட்ட விதம் அடிப்படையற்றது என்றார்.