கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் மீள ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவிக்கின்றார்.
இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் 100ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2,962 பாடசாலைகளை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கும் நோக்குடன் ஜுலை மாதம் 12ம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சுமார் 2,42,000 ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 100 மாணவர்களுக்கு குறைவாக இயங்கும் பாடசாலைகளை ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.