நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் பெரும்பாலானவை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் தற்போது வெளியாட்கள் தங்கி வருவதாகவும் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதன்படி, கைது செய்யப்பட்டு தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லம், மீள பெறப்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், அதனை மீண்டும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். அந்த வீட்டை ரஞ்சனுக்கு வழங்கிமை தொடர்பில் தனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்த சபாநாயகர், தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவது தொடர்பில் அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை சமீபத்தில் இரத்துச் செய்யப்பட்டது. இதனையடுத்து அதனை மீள கையளிக்குமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
பின்னர், குறித்த இல்லத்தை பொறுப்பேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அந்த வீட்டிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தனிப்பட்ட பணிக்குழாமினர் அவர்களது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென தெரிவித்தார்.
அதேபோல, தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரையில், ரஞ்சன் ராமநாயக்க அந்த வீட்டில் விருந்தினராக இருக்க முடியுமெனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
