(இராஜதுரை ஹஷான்)
கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்துக்குள் சீர்செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கல்வித்துறைக்க பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களின் கற்றல் நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இணையவழி முறைமை ஊடாக ஆசிரியர்கள் கற்பித்தல்நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
ஆசிரியர்- அதிபர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும்வரை ஒன்லைன் முறைமை ஊடான கற்பித்தலில் ஈடுப்பட போவதில்லை என ஆசிரியர்கள் உறுதியாகவுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் மாணவர்களன் கல்வி நிலையை கருத்திற் கொண்டு தொலைநோக்கு முறைமை ஊடாக கற்றல் நிகழ்ச்சிகள் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. அத்துடன் இவ்வருடம் நடைப்பெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட கற்பித்தல் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகின்றன.
கொவிட் -19 தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே எதிர்வரும் மாதம் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
கொவிட் -19 தாக்கத்தினால் கல்வித்துறைக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. இச்சவால்களை வெற்றிகொள்ள புதிய கொள்கை வகுப்பது அவசியமாகும். கல்வித்துறை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
