(நா.தனுஜா)
அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் உயர்மட்ட கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் யூசுப் அல்-ஒதைமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை நினைவு கூர்ந்த அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கும் சர்வதேச முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்புகள் தொடர்பில் குறிப்பிட்டார்.
பலஸ்தீன அரசை முதலில் அங்கீகரித்தவர்களில் இலங்கையும் ஒன்று என்பதுடன் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்க்ஷ, இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தை நிறுவி கடந்த 25 ஆண்டுகளாக அதன் தலைவராகவும் பணியாற்றினார் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்தோடு பலஸ்தீனப் பிரச்சினைக்கு இலங்கை தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஏனைய சமூகங்களிலிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் குழுக்களினால் ஏற்படக்கூடிய அபாய நிலை தொடர்பில் குறிப்பிட்ட அவர், இது பிரிவினை மற்றும் பேரழிவுக்கான செயன்முறை என்பதுடன் தீவிரவாத செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கக்கூடும் என்றும் கூறினார்.
