Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

அப்பாவி விவசாயிகளின் நெல்லை ஏன் பறிக்கிறீர்கள்? - தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் செயல் - சாணக்கியன் MP

 



வா.கிருஸ்ணா


நெல் பறிமுதல் என்ற போர்வையில், அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு,கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கான நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், நேற்று
(31) அவரை சந்தித்து, தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில், நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில், இன்று அந்த நெல்லை பறிமுதல் செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துவருவதால் தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத காரணத்தாலும் அடுத்த விவசாய செய்கைக்குத் தேவையான முளை நெல்லுக்காகவும் நெல் சேமித்துவைக்கப்படுவதாகவும் உரிய காலத்தில் நல்ல விலை கிடைக்கும்போது, அவை விற்பனை செய்யவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்று அவ்வாறு நெல்லை வைக்கமுடியாது என விவசாயிகளின்
களஞ்சியங்களை முற்றுகையிடும் நுகர்வோர் அதிகார சபையினரால் அவை சீல் வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, பாரியளவிலான
நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள்
சேமித்துவைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்தார்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் விவசாயத்தை நம்பி வாழும்
மக்கள். ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குள் அந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் வரும்.

“தற்போதைய அரசாங்கம் தனது நிர்வாகத்தை சரியான முறையில் செய்யாமல்,
தனது வேலைத்திட்டங்களை பொறுப்பற்ற வகையில் செய்து, இலங்கை
பொருளாதாரத்தை முற்றாக அழித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும்
அழிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

“அரசியின் விலையை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால், இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் நெல்லை பறிமுதல் செய்யுங்கள்.

அதனைவிடுத்து, வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி
விவசாயிகளின் நெல்லை பறிக்கின்றீர்கள்.“இந்தச் செயற்பாடு, வட, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »