எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படுமென எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்..
அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த சில நாட்களில் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் டீசல் 111 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 77 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதே அதற்கு பிரதான காரணமாகும். அதனால், தொழிற்சாலைகளிலுள்ள இயந்திரங்கள் உட்பட பஸ்களும் தற்போது மண்ணெண்ணெய்யினூடாக இயங்கும் நிலை உருவாகியுள்ளது.
சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான விலையில் பரஸ்பர வேறுப்பாடு இருப்பதால் சமையல் எரிவாயுவில் சமைப்பதற்குப் பதிலாக மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்தி சமைக்கும் அளவுக்கு மக்கள் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துள்ளனா். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பிரதேசங்களுக்கு வரையறுக்கப்பட்டளவுக்கே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகின்றது.
மக்கள் பெரும் நெருக்கடி நிலையில் இருப்பதால், மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதைபோன்று ஆகிவிடக் கூடாது என்பதற்காக எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. இருந்தபோதிலும், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது என்றாா்.