Our Feeds


Saturday, January 1, 2022

ShortNews

மறு அறிவித்தல்வரை மக்கள் ஒன்று கூடல்கள் , கூட்டங்களை நடத்துவதற்கு இன்று முதல் தடை!


 

(எம்.மனோசித்ரா)


கொவிட்-19 பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இன்று (01) முதலாம் திகதி முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய திருமண வைபங்களில் மண்டபத்தின் கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு மாத்திரம் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மூடிய பகுதிகளுக்குள் இன்றி வெளிப்புறங்களில் இவ்வாறான வைபங்களை நடத்துவது உசிதமானதாக இருக்கும் என்று வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்கள், சந்தைகள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் 50 வீதமானோருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட வைபங்கள் மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டால் குறித்த மண்டபத்தின் கொள்ளளவில் 50 சத வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும். எனினும் வீடுகளில் ஏற்பாடு செய்யப்படும் வைபவங்களில் ஆகக்கூடியது 10 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

அநாவசியமாக அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் அழைத்துச் செல்லப்பட வேண்டும். காற்று குளிரூட்டப்பட்ட பஸ்களில் காற்றோட்டமாக இருக்கும் வகையில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அத்தோடு பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும்.

தொழில் ஸ்தலங்களில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மறு அறிவித்தல்வரை மக்கள் ஒன்று கூடல்கள் , கூட்டங்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதிய சுற்று நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மெட்ரோ)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »