Our Feeds


Monday, January 10, 2022

ShortNews

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தப்பியோட முற்பட்ட வெளிநாட்டவர் யார்? விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!



(எம்.எப்.எம்.பஸீர்)


போலியான கடவுச் சீட்டில் அபூதாபி ஊடாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு செல்ல முற்பட்ட, வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஒரு மணி நேர போராட்டத்தின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப் படையின் கொமாண்டோ படையணியினர், பொலிஸார், விமான நிலையப் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என உடனடியாக வெளிப்படுத்தப்படாத நிலையில், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் அபுதாபியிலிருந்து பாரிஸ் நகருக்கு இன்று (10) அதிகாலை 2.45 மணியளவில் புறப்பட தயாராகவிருந்த இட்டிஹார்ட் விமான சேவைக்கு சொந்தமான ஈ.வை.265 எனும் விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை அதிகலை 1.00 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட குறித்த சந்தேக நபர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்த சீஷெல்ஸ் தேசிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர் எல்லை கண்காணிப்பு பிரிவின் தொழில்நுட்ப ரீதியிலான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர், குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவ்வாறு விசாரணை செய்யும்போது, திடீரென சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து விமான நிலைய சுங்கப் பிரிவின் ஊடாக ஓடியுள்ள சந்தேக நபர் அங்கிருந்து பாதுகாப்பு மதில் ஒன்றின் ஊடாக பாய்ந்து விமான நிலைய வெளியேறல் பிரிவுக்குள் பிரவேசித்து அங்கு கூரைப் பகுதியில் ஒழிந்து கொண்டுள்ளார்.

சந்தேக நபர் ஓடியதையடுத்து, அவரது நடவடிக்கை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், உடனடியாக தகவல் கட்டுநாயக்க விமானப்படை முகாம், விமான நிலைய பொலிஸாருக்கும் பகிரப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே உடனடியாக விமானப்படையின் கொமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமன நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »