பண்டாரகம - படல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் இருந்து 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட போதே குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி குழந்தை தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் குணமடையுமாறு பெற்றோர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரார்த்தனை நடவடிக்கையின் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குழந்தையின் உயிர் மீட்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் பிரார்த்தனை செய்தும், மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதுடன் பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளது.
படல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.