நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளில், வெலிகம – கொக்மாதுவ பிரதேசத்தின் விஹாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்காக, போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மற்றொரு பிக்குவை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் புனித மரியாள் தமிழ் வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து இன்று (15) குறித்த பிக்குவைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
குறித்த பரீட்சை நிலையத்தில், 4 ஆவது நாளாக அந்த பிக்கு இன்று க.பொ.த. உயர் தர பரீட்சையின் சிங்களம் – பகுதி 2 பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சந்தேகத்துக்கு அமைய அவர் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே கைது செய்யப்பட்டுள்ள குறித்த பிக்கு, பெலி அத்த , இசுருபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.