திருகோணமலை சண்முகா கல்லூரி சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் முகநூல் போராளில் சிலர் நான் கூறாத சில செய்திகளை நான் கூறியதாக ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் என் பெயரில் பரப்புகிறார்கள்.
அதில் எனது பெயரைக் கூட சரியாக அவர்கள் எழுதியிருக்க வில்லை. சில விஷமிகள் தான் இதனை செய்கிறார்கள்.
உண்மையில் சண்முகா பிரச்சினை தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியையுடனோ, அல்லது அதிபருடனோ பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. வெருமனே முகநூலில் வரும் செய்திகளை மாத்திரம் வைத்து நாம் கருத்துச் சொல்ல முடியாது.
சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இடம் பெற்ற பிரச்சினை தொடர்பில் பக்கசார்பில்லாத ஒரு விசாரனை நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாம் அறிய வேண்டும். விசாரனை முடிவை வைத்து நாம் அதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இந்த சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் உடன் நிறுத்த வேண்டும்.
திருகோணமலை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்திருந்த அறிக்கையை நான் வரவேற்கிறேன். இரு சமூகத்தினரும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இதனை இரு சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நாம் மாற்றிக் கொள்ளக் கூடாது என அவரும் தெளிவாக அறிவித்திருந்தார்.
அதே போல் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் எமது த.தே.கூ கட்சியின் தலைவருமான சம்பந்தன் ஐயா அவர்களும் இது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரனை நடத்தப்பட வேண்டும் என கூறியிருக்கிறார்.
உண்மையில் இங்கு வாழும் அனைத்து இனங்களும் அவர்களுடைய உரிமைகளை பேணக்கூடிய வகையிலான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். அனைத்து சமூகங்களும் தமது உரிமைகளை சமனாக கொண்டு போகக் கூடிய வகையில் இந்நாடு இருக்க வேண்டும்.
சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.